சனி, 29 டிசம்பர், 2012

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும். 

"ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்.
"அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"... அப்பாவியாய் கேட்ட மகளிடம்... "வாசல் டா கண்ணா"... என்று கூறி புறப்பட்டான்.

விமான பணிப்பெண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனது முன்னால் செல்பவர் வழிவிடும் வரை நின்று பின் தனது இருக்காய் நோக்கி சென்றான். 12 A, B இருக்கையில் அமர்ந்ததும், "ப்ரியா, belt மாட்டிக்கோடா" என்று அவளுக்கு பெல்டை மாட்டிவிட்டான்.

"எப்பபாத்தாலும் ஜன்னல் சீட்ல நீயே உக்கார்ரப்பா.. திரும்ப வரும்போது நான் உக்காருவேன்"... சண்டையிட்ட ப்ரியாவிடம் "சரி டா".. என்று சொல்லி தனது புத்தகத்தை திறந்து படிக்கலானான். 

"கார்த்திக்!"... ப்ரியாவின் குரல் கேட்டு நிமிர்தவனுக்கு அதிர்ச்சி.... நினைத்துக்கூட பார்க்கவில்லை மீண்டும் ப்ரியாவை சந்திப்பான் என்று.... 4 ஆண்டுகள் பின் இன்று விமானத்தில் அவன் இருக்கைக்கு அருகில். 

"அப்பா உனக்கு இந்த ஆண்டியை தெரியுமா?"... ப்ரியா கேட்டாள்.... தெரியும் என தலையசைத்துவிட்டு.... அவளை நோக்கி.... "எப்படி இருக்கீங்க ப்ரியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு, தனது மகளை நோக்கி... "இவங்க பேர்தான் ப்ரியா.. அப்பா உனக்கு கதை சொல்லுவேன் இல்லயா... அந்த ஆண்ட்டி இவங்கதான்".... என்று அவள் காதில் மெல்லியதாய் கூறினான்.

அவள் இருக்கையில் அமர்ந்த பின்னும் நெகிழ்ச்சியில் இருவராலும் எதவும் பேசிக்கொள்ள இயலாததை உணரந்தவளாய் அந்த சிறுமி, ப்ரியாவை நோக்கி... "ஆண்ட்டி, என் பேர் கூட ப்ரியா தான், அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பொய் செல்லவே மாட்டார்"... அவ்வளவு ஸ்மார்டா பேசுகின்ற தன் பெண்ணை பார்த்து ஆச்சர்யத்தில் திளைத்தும் வெளிகொணராமல் புன்னகை உதிர்த்து தனது மகளின் தலை கோதினான்.

சில நிமிட மௌனத்தின் பின், அவளே மௌனத்தை உடைத்தாள்.

"நான் என்ன அவ்ளோ நல்லவளா கார்த்திக்?"... நெகிழ்ச்சியில் அவள் கேட்க்க, இவன் பதில் கூறும் முன், அவனது மகள் முந்திக்கொண்டு "ஆண்ட்டி இந்த dialog விண்ணைத்தாண்டி வருவாயா படத்துலையே கேட்டாங்க.. நீங்க ஒரு changeக்கு, நீங்க என்ன அவ்ளோ நல்லவரா கார்திக்ன்னு கேட்டிருக்கலாமே?"... என்று கூறி சிரித்தாள்.

"நீ ரொம்ப ஸ்மார்ட்டா பேசரடி".. என்று சிறுமியின் தலை தழுவி.... "உங்கம்மா வரலையா?" என்று கேட்டாள்... சிறுமி நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க..."அவங்க already போய்ட்டாங்க.. திரும்பி வரும்போது ஒண்ணா வருவோம்".. என்றான்.

"நான் அவங்களை பார்க்கணுமே கார்த்திக்?".... கேட்டவளிடம் "கண்டிப்பா, ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"... என்று கூறினான்.

"அப்பா நான் bathroom போயிட்டு வர்றேன்"...என்று சொல்லி ப்ரியா அங்கிருந்து அகன்றாள்

"எப்போ adopt பண்ணீங்க கார்த்திக்?"....
"Processing 2 வருஷம் ஆச்சு, இப்போ எங்களோட வந்து 1.5 வருஷம் ஆச்சு"...

மீண்டும் மௌனம் நிலவ.... "நீங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க சந்தோஷமா இருக்கு"... மனதுக்குள் கூரியவளாய்... நீங்க ப்ரியாகிட்ட ஏன் பொய் சொல்றதில்லன்னு கேட்டாள்... 

அதெப்படி பெண்கள் மட்டும் தங்கள் எல்லா கேள்விக்கும் விடை தேடுகிறார்கள்?... அதுமட்டுமல்லாது எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டு விடுகிறார்கள்... என்று நினைத்துக்கொண்டே சிறிதாய் ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து மௌனத்தை பதிலாய் தந்தான்.... சில விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட சொல்லாமல் புரியவைக்க கற்றுகொடுத்த குருவே அவள்தான்!.... புரிந்து கொண்டவளாய் மேலும் தொடராமல் "ப்ரியான்னு பேர் வச்சிட்டாலே ஸ்மார்ட் ஆயிடறாங்கல்ல"... என்று கூறி புன்னகைத்தாள்....

டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும், "கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்" "take care டா குட்டி "... என்று சின்ன பெண்ணிடம் கூறிவிட்டு விடைபெற்றாள்.

அவள் சென்றதும் கார்த்திக்கிடம் சிறுமி "அப்பா இதுவரைக்கும் நீங்க ப்ரியாகிட்ட சொன்ன உண்மைகளை விட இன்னிக்கு நீங்க அம்மா இருக்காங்கன்னு சொன்ன பொய் ரொம்ப ரொம்ப உயர்ந்ததுப்பா".... என்று சொல்ல.... அவளை அணைத்து முத்தமிட்டான்.

"அவங்க வீட்டுக்கு வந்தா என்னப்பா பண்றது?".. என்று அறியாமல் கேட்ட சிறுமியிடம்... "அவங்க வரமாட்டாங்க டா".... என்று சொல்லி நடக்கலானான்.

பல கதைகளின் இனிமையை உணர்வதற்கு அதன் கசப்பான முடிவுகளே காரணம்...

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்


படித்தவை:

  1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்:கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு: ரயிலில் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் ஏழை சிறுமிக்கு பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன் பழம் வாங்கிக் கொடுக்கிறான். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.
  4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
  5. சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைவிகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் கதைகளும் நினைவு வருகின்றன.
  6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றன. அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு.பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  8. தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.
  9. பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.
  10. கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  11. திலீப்குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப்குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது.இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவுஎன்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
    கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  12. வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  13. ஜெயமோகன் – பல்லக்கு: வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போது ஒரு முன்னாள் “வேலைக்காரன்” மூலம் இருப்பவற்றை விற்று காலத்தை ஓட்டுகிறது. அந்த வேலைக்காரனின் சுயரூபம் தெரியும்போது… பிரமாதமான கதை.
  14. வண்ணதாசன் – நிலை: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  15. ஆ. மாதவன் – நாயனம்: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  16. பாமா – அண்ணாச்சிநல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  17. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் – நல்ல denouement, ஆனால் என் கண்ணில் நாஞ்சில் இதை விட பிரமாதமான கதைகளை எழுதி இருக்கிறார்.
  18. சுஜாதா – மகாபலி – என் கண்ணில் சுமாரான கதைதான்.

படிக்காதவை:

  1. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  2. இரா. முருகன் – உத்தராயணம்
  3. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
  6. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  7. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
  8. சிவசங்கரி – செப்டிக்
  9. சோ. தருமன் – நசுக்கம்
  10. சுந்தர பாண்டியன் – கனவு
  11. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!
தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள், தமிழ் சிறுகதைகள், சுஜாதா

மனம் தளராதே | எறும்பு கதை


மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

வாழ்க்கைப் பயணம் - உழைப்பு


அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது


எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

மரங்கொத்திப் பறவை


சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.  அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?

மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன்  கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.

நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.


மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை  இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.
அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.
உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்.......?

அன்னையின் வளர்ப்பு | ஒரு விஞ்ஞானியின் கதை


தமிழ் அறிவு கதைகள் 100 வது பதிவு | தங்களின் ஆதரவுக்கு  நன்றி

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி  இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார், ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.

புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி?


ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.

அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.

 ""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.

""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.

""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.

""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?'' 

""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.

அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.

'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.

அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.

""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.

புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.

""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''

""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''

""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''

""மாட்டேன்!''

புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.

""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.

""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.

""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.

""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''

""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.

புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.

புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்... புலிக்கு கோடு  வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!

மொக்கைச்சாமி

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்.... 

"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".

"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...

இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"

பாவம்... அவநுக்கு 'சா' வே வரல!

ஒரு பழைய கதை

ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிட விரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிக வேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையிலிருந்தான்
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.

சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.

அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.

தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்துரு மாற்ற வரலாறு
எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண,இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]மொழியின் தோற்றம்.

மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது.
ஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர். மொழியைப் பற்றி விரிவாக எழுதப் புகுந்த எஸ்பெர்ஸன் (Gesperson) அவர்கள்,
" மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்கு பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்; அதன் பிறகு பொருளின் பண்புகளை தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாக குறுக்கெழுத்துப் போல ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இட்டு வழங்கினான்; அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது" எனத் தம் அரிய ஆராய்ச்சி நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார்.[1]

[தொகு]எழுத்துக்களின் வளர்ச்சி நிலைகள்

மேற்கண்ட கூற்றினைக் கொண்டு எழுத்துகளின் வளர்ச்சியை
  1. சித்திர எழுத்து
  2. தன்மைஎழுத்து
  3. உணர்வெழுத்து
  4. ஒலி எழுத்து
என நான்காகக் கொள்ளலாம். இதனை நன்னூல், எழுத்தியல் ஈற்றுச் சூத்திர உரையில் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளார். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் உரையாசிரியர் சில வேறுபாடுகளுடன் வேறு பல எழுத்து வகைகளையும் குறிக்கிறார். " பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் ....... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க " (பக்கம். 568,569) என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.
மேற்கூறிய நால்வகை எழுத்துகளுள்

[தொகு]உருவெழுத்து

உருவெழுத்து (சித்திர எழுத்து முறை) சிந்துவெளித் திராவிடரிடம் காணப்படுகிறதென்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இவற்றைப் பழைய எகிப்தியரும் பாபிலோனியரும் வழங்கி வந்தனர்.

[தொகு]உணர்வெழுத்து

உணர்வெழுத்து என்பவை சீனர்களின் பண்டைய எழுத்து முறையாகும்.

[தொகு]தன்மைஎழுத்து

தன்மைஎழுத்து எகிப்தியர்களிடம் கணப்பட்டதாகும்."அறிவு நுட்பத்திற்கு கண்ணும் எறும்பும், அறிவின்மைக்கு ஈயும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பும், வெற்றிக்குக் கருடனும் பிறவுமாம்....[2].

[தொகு]ஒலி எழுத்து

ஒலி எழுத்து என்பவை எழுத்துக்களுக்கேற்ற ஒலி வடிவத்துடன் எழுதப்படுவது ஆகும். இவ்வெழுத்துக்களுக்கே இலக்கண நூல்கள் இலக்கணம்கூறுகின்றன.

ஆகவே சீனர், எகிப்தியர், பாபிலோனியர் முதலிய பண்டைய நாகரிகமுடைய மக்கள் வழங்கியவை போன்ற எழுத்துக்கள் - சிந்துவெளித் திராவிடர் வழங்கியவை போன்ற எழுத்துகள்- பழங்காலம் தொட்டே நம் தமிழகத்தும் வழங்கி வந்தன என்பதும், அவற்றுள் சில யாப்பருங்கல விருத்தியுரை காலத்தும் ( சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில்) வழக்கில் இருந்திருக்கலாம் அல்லது அவை பற்றிய நூல்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

[தொகு]கண்ணெழுத்துக்கள்

கண்ணெழுத்துக்கள் என்பன சித்திர எழுத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர்- சித்திரக் காரிகள் எனப்பட்டனர். இதற்கு 'நோக்குனர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். எழுதுதல் என்பதற்குச் சித்திரித்தல்' என்ற பழைய பொருளும் உண்டு.
சங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் 'இறக்குமதி ' ஆன மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் கண்ணெழுத்துக்கள் இடப்பட்டிருந்தனவாம்.
1."வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" [3]
2.".......இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுட்தின கைபுனை சகடம்" [4]
என வரும் அடிகள் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தாருக்குத் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்பட்டனர்.
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை முடங்கல் மன்னவர்க் களித்து" [5]இவற்றால்
  • கண்ணெழுத்து என்பது சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர் என்பதும்
  • வெளிநாட்டு வணிகர் (வம்ப மாக்கள்) தம் பெயர் முதலியவற்றை இந்த எழுத்துக்களிலேயே பொறித்து வந்தனர் என்பதும்
  • இவ்வெழுத்துக்களிலேயே அக்கால அரசர்திருமுகம் முதலியன எழுதப்பட்டு வந்தன என்பதும் அறியலாகிறது.
இவ்வெழுத்துக்கள் முற்காலத்தே தமிழில் வழங்கியவை என்பதை சாசன இலாகாவினின்றும் வெளிவந்த புத்தகத் தொகுதிகளை நோக்குமிடத்து அறியலாம். இவை சங்கேத எழுத்து அல்லது கரந்தெழுத்துக்கள் எனவும் வழங்கப்பட்டன. கந்தருவ தத்தை சீவகனுக்குக் கரந்தெழுத்தில் கடிதம் வரைந்ததாகத் தம் காலத்தில் வழங்கிய இக்குறியீடெழுத்துக்களைக் கொண்டு திருத்தக்கத் தேவர் குறிப்பிட்டுள்ளார். [6]

[தொகு]தமிழ் எழுத்துகளின் தொன்மை

"சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும், 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம்." [7] என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் "எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை" [8] எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.

[தொகு]தொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை

தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில்(கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர். அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு(டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழகம் எல்லை பெற்றது. "வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர்,
"வடசொற் கிளவி வடவெழுத்த் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே."
என வட சொல் தமிழில் கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார்.
இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை.அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.
இப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. " சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல்என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது [9] இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும்கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர். அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் " திருநாதர் குன்று " என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப்பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.

[தொகு]பிற எழுத்துகள்

கிரந்த எழுத்துக்கள் (ஷ,ஜ,ஹ போன்றவை) வடமொழி சாசனங்களையும் தமிழ் மொழி சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டன. ஆனால் தமிழ் மொழியில் உள்ள சாசனங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களால் எழுதப்பட்டு வந்தன. தமிழகத்தில் காணப்பட்ட பிராமி எழுத்துகளும் அசோகன் பொறித்த தென் கல்வெட்டு எழுத்துகளும் ஏறக்குறைய ஒத்துள்ளன. அவை தமிழ் எழுத்துக்களின் அமைப்பையே அடிப்படியாகக் கொண்டவை. அவற்றிள்  ஆகிய வல்லெழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. வடமொழியில் உள்ளதைப் போல அவற்றின் வருக்க எழுத்துக்கள் பெரும்பான்மை காணப்படவில்லை. இவற்றில் வட நாட்டுப் பிராமி கல்வெட்டுகளில் காணப்படாத சில எழுத்துக்களும் கிடைக்கின்றன.

[தொகு]வட்டெழுத்துக்கள்

வட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம். வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

[தொகு]சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்

சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலம் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.

[தொகு]வட்டெழுத்துக்களின் மூலம்

டாக்டர் பீலர் என்பவர் "வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு" [10]என்று கூறுகிறார்." வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் கொள்ளப்பட்டன " [11] என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன; வட்டெழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைகாலந்தொட்டே உருதன்மைஉணர்வுஒலிகண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும்.

மேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது. கோலார், சேலம், வட ஆர்க்காடு முதலிய பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளில் தமிழ்-வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கி. பி. 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதனால் இருவகைத் தமிழ் எழுத்துக்களும் வேறு வேறு என அறியலாம். " தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே வட மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம்,பிராமி) தமிழகம் புக்கனர் " என பர்நெல் கூறுவது குறிப்பிடத்தக்கது.

[தொகு]சிந்துவெளி எழுத்து- தமிழ் எழுத்து

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.
  1. சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.
  2. தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.
  3. சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள்,ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம்.

[தொகு]உசாத்துணை

மா. இராசமாணிக்கனார், 'தமிழ் மொழிச் செல்வம்'- திராவிட எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும். செல்வி பதிப்பகம். 1958

[தொகு]மேற்கோள்கள்

  1.  டாக்டர் மா. இராச மாணிக்கனார். "தமிழ் மொழிச் செல்வம்" செல்வி பதிப்பகம்.1958.
  2.  மு இராகவையங்கார். 'இலக்கிய சாசன வழக்காறுகள்' பக்கம் 4.
  3.  சிலப்பதிகாரம், காதை 5, வரி.111-112.
  4.  சிலப்பதிகாரம், காதை 26, வரி.136.
  5.  சிலப்பதிகாரம், காதை26, வரி 170,171.
  6.  சிந்தாமணி, செய்யுள்.1767.
  7.  மு இராகவையங்கார்-'சிலாசாசன வழக்காறுகள்' pp.1&8.
  8.  Vide.P.N. Subramanian's 'Ancient Tamil letters', Kalaimagal Part 70.p.299.
  9.  Indian Antiquary. Vol.62,Vide Kalaimagal, part 70.P.297.
  10.  டாக்டர் பீலர் ' Ancient Indian Letters', P. 73.
  11.  டாக்டர் பர்நெல், Vide his ' SouthIndian paleography',P.49